அம்பேத்கார் பல்கலை.க்கு சென்னை அருகே 15 ஏக்கம் நிலம்
சென்னை: சென்னை அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்குடி அருகே 15 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்ற நடந்த சட்டம் மற்றும் நீதித்துறை மானிய மீதான கோரிக்கைக்கு பொதுப்பணித்துறை மற்றும் சட்ட அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில்,
நாட்டில் நீதித்துறை சிறப்பாக இருந்தால் ஜனநாயகம் திழைக்கும். சுதந்திரமாக இருக்கும் நாட்டில் ஜனநாயகம் இருக்கும். இதனால் சட்டம் மற்றும் நீதித்துறை மீது கலைஞர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
அதிமுக ஆட்சியின் போது நீதி துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ. 23 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் மூன்று காலத்தில் சுமார் ரூ. 300 கோடி செலவிட்டு இருக்கிறோம். இதுவரை நீதிமன்றத்துக்காக 23 புதிய கட்டிடங்களை கட்டி முடித்துள்ளோம்.
நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புகளுக்காக 19 கட்டிடம் குறித்த பணிகளை அறிவித்துள்ளோம். அதில் 15 முற்று பெற்றுவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் 22 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன.
இந்த ஆண்டு நீதி துறையில் நாங்கள் செய்யவிருக்கும் சில புதிய அறிவி்ப்புகள் விவரம்:
திருவாரூர், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, காட்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படும்.
அதே போல் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்பு கட்டப்படும்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் தற்சமயம் செயல்பட்டு வரும் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தை, கூடுதல் செலவினம் ஏதுமின்றி, சத்தியமங்கலத்துக்கும், இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தை கூடுதல் செலவினம் ஏதுமின்றி, பெருந்துறைக்கும் மாற்றி அங்கு தலா ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
சென்னை அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகமானது 1997ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி கிரீன்வேஸ் சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு இந்த நிலம் போதுமானது அல்ல என்ற பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்று காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி ரெயில் நிலையம் அருகில் 15 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரி மாணவர் விடுதியின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகளுக்காக ரூ.87.92 லட்சம் ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது
புத்தகங்களுக்கு ரூ. 14 லட்சம்...
தமிழகத்தில் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளுக்கும் புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.14 லட்சம் வழங்கப்படவுள்ளது. மதுரை அரசு சட்டக் கல்லூரிக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய நான்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.76 லட்சம் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று வருட சட்டப்படிப்புக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள பட்ட மேற்படிப்பு துறை மற்றும் ஆராய்ச்சி துறைக்கும் தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படவுள்ளது.
விரிவுரையாளருக்கு கூடுதல் சம்பளம்...
அரசு சட்டக் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற பகுதி நேர விரிவுரையாளர்களின் மாதத் தொகுப்பு ஊதியத்தினை ரூ5,500லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற கெளரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.100 வீதம் மாத மதிப்பூதியம் ரூ.4000த்துக்கு மிகாமல் என்பதனை, ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.500 வீதம் மாத மதிப்பூதியமாக ரூ.10,000த்துக்கு மிகாமல் உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது என்றார் துரைமுருகன்.