சிதம்பரம் மீது ஷூ வீச்சு-ஜர்னைல் வேலை 'காலி'
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது ஷூ வீசிய ஜர்னைல் சிங்கை, அவர் வேலைபார்த்த தைனிக் ஜக்ரன் பத்திரிகை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
கடந்த 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் டைட்லரை நிரபராதி என கூறி சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.
இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தைனிக் ஜாக்ரன் பத்திரிகை நிருபர் ஜர்னைல் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேள்வி கேட்டார். ஆனால், இதற்கு சிதம்பரம் அளித்த பதில் அவருக்கு திருப்தி கொடுக்கவில்லை.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்றி சிதம்பரம் மீது வீசினார். அதிர்ஷ்டவசமாக அது சிதம்பரம் மீது படாமல் சென்றுவிட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து, வெளியேற்றினர். அவரை மன்னித்துவிடுமாறு சிதம்பரம் கூறினார்.
இந்நிலையில் இச்சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் அவரை வேலையை விட்டு நீக்குவதாக தைனிக் ஜாக்ரன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
காங். தான் காரணம்...
இது குறித்து ஜர்னைல் சிங் கூறுகையில்,
காங்கிரஸ் அரசு, ஜாக்ரன் பத்திரிகைக்கு என்னை வேலையை விட்ட நீக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளது. அதனால் தான் இந்த சம்பவம் நடந்து சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் என்னை நீக்கியுள்ளனர்.
அவர்கள் தேர்தல் முடியும் வரை காத்திருந்தார்கள். தற்போது மீண்டும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடியும் என்பதால் என்னை நீக்விட்டார்கள் என்றார் அவர்.