ரயில்வே பட்ஜெட்: தமிழகம் பெரும் ஏமாற்றம்
சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கும் பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. 5 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் அதில் 2 ரயில்களால் கேரளாவுக்கே பலன் அதிகம்.
மமதா பானர்ஜி இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் தொடர்பாக இடம் பெற்றுள்ள அம்சங்கள்..
- உலகத் தரம் வாய்ந்ததாக 50 ரயில் நிலையங்கள் மாற்றப்படவுள்ளன. அவற்றில் ஒன்று சென்னை சென்டிரல் ரயில் நிலையம். இதை லாலுவும் சொன்னார். இப்போது மம்தாவும் சொல்கிறார்.
- 50 ரயில் நிலையங்களில் ஷாப்பிங் பகுதிகள், உணவு விடுதிகள், பட்ஜெட் ஹோட்டல்கள் உள்ளிட்டவை கொண்ட பன்னோக்கு வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பட்டியலில் மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய இடங்கள் இடம் பெற்றுள்ளன.
- சென்னையில் ரயில்வே மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகியவை தனியார் அரசு கூட்டு செயல்பாட்டில் உருவாக்கப்படவுள்ளன.
- டெல்லி- ராயபுரம் இடையே பிரீமியம் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- சென்னை - டெல்லி இடையே நான் ஸ்டாப் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- சென்னையில் பீக் அவர் நேரங்களில் மகளிருக்கென தனி மின்சார ரயில்கள் விடப்படவுள்ளன.
- மதுரை-சென்னை வாரம் இருமுறை ரயில், மதுரை வழியாக கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படவுள்ளன.
- தமிழகத்தைச் சேர்ந்த சில ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஜம்முதாவி-மதுரை ரயில் நெல்லை வரையும், எர்ணாகுளம்-திருச்சி ரயில் நாகூர் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் தமிழகம் தொடர்பான சாதகமான அம்சங்கள்.
அதேசமயம், சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான மாடி ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படவில்லை.
சென்னை-மாமல்லபுரம் ரயில் பாதை அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
திண்டுக்கல்- மதுரை இடையிலான ரயில் பாதை இரட்டிப்பாக்கும் பணிகள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
கோவையிலிருந்து ஷோரனூருக்கு தினசரி ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைவிட கேரளாவுக்கு பலன் அதிகம்.
மேலும் திருப்பூர், சேலம் உள்ளிட்ட சேலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு எந்த திட்டமும் ரயிலும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் அடு்த்த தேர்தலில் பாடம் புகட்டினால் காங்கிரஸ்-திமுக கூட்டணி கோபித்துக் கொள்ளக் கூடாது.
பெங்களூர்-தூத்துக்குடி இடையே மதுரை வழியாக இடையே இன்னொரு ரயில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications