வெளிநாட்டு வேலை-முன்னாள் வங்கி ஊழியர் கைது
சென்னை: இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலை தமிழர்களை ஆட்டுவித்து கொண்டிருக்கிறது. உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட அமெரிக்கா, அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு வேலை பறிபோய் வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் இந்த வெளிநாட்டு வேலையின் மீதுள்ள மோகம் குறையாமல் இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் தான் அரியலூரை சேர்ந்த செந்தில்குமார்(25). இவருக்கு சமீபத்தில் லண்டனில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூ. 2 லட்சம் சம்பளத்துக்கு முன்பதிவு அலுவலர் வேலை காலி இருக்கிறது. உங்களுக்கு சேர விருப்பமா என கேட்டு இ-மெயில் ஒன்று வந்தது.
எப்படியாவது வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த செந்தில்குமார் இந்த வாய்ப்பை கோட்டைவிட கூடாது என முடிவு செய்தார்.
இதையடுத்து அவரிடம் விசா பதிவு, விமான டிக்கெட் மற்றும் இதர செலவுகள் எனக்கூறி அந்த மர்ம ஆசாமிகள் செந்தில் குமாரிடம் ரூ. 8 லட்சத்து 9 ஆயிரத்து 300 கேட்டனர். அவரும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
இதையடுத்து அவர் கடந்த மாதம் 17ம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் விசாரணை செய்தார். இதையடுத்து விசாரணை களத்தில் இறங்கிய சைபர் போலீசார் அதிரடியாக செயல்பட்டனர். செந்தில் குமார் வங்கிகளில் போட்ட பணத்தின் ரசிதை வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.
அவர்கள் கடந்த 5ம் தேதி மகராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்த மீரா கிழக்கு சாலையை சேர்ந்த சுனில் டிகவாலே என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவருக்கு இந்த டிகவாலே தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.3 லட்சம் எடுத்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர் சென்னை கொண்டு வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் ஒரு முன்னாள் வங்கி ஊழியர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications