கூடுதல் பயணிகளை ஏற்றிய ஏர் இந்தியா ஊழியர்கள் - 9 பேர் சஸ்பெண்ட்
டெல்லி: ஏகப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு புதுச் சிக்கல் எழுந்துள்ளது. மும்பை - மங்களூர் விமானத்தில் கூடுதலாக 3 பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செயலுக்குக் காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சம்பந்தப்பட்ட வி்மானத்தில் மே 5ம் தேதி ஒரு பயணி (பெண்) கூடுதலாக ஏற்றப்பட்டு விமானியின் அறையில் அமர வைத்து பயணம் செய்துள்ளார்.
அதேபோல மேலும் 2 பேர் பிளைட் அட்டென்டுகளுக்கான சீட்களில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது மட்டுமல்லாமல், சட்டவிரோதமான செயலும் ஆகும். ஒரு வேளை சம்பந்தப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியிருந்தால், அந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் எந்தவித இழப்பீடும், நிவாரணத் தொகையும் கிடைத்திருக்காது.
இந்த தவறை இழைத்தவர்கள் மீது கிரிமனல் வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சட்டவிரோதமாக பயணம் செய்த அந்த மூன்று பேரும் ஒரு மூத்த விமானியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
3 பேரை கூடுதலாக பயணிக்க வைத்ததாக 9 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.