ஆஸி..உல்லாசம்-எஸ்கேப்..துரத்தி பிடித்த காதலி!

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் தியோடர். இவரது மகன் கார்த்திக் தியோடர் (30). சிட்னி நகரில் மெக்கானிக்கல் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.
நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் கவிதா(28). இவர் சிட்னியில் உள்ள காமன்வெல்த் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பெற்றோர், அண்ணன்களும் ஆஸ்திரேலியாவிலேயே வசிக்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே ஊரில் பணியாற்றியதாலும், இருவருக்கும் இடையே பழக்கமாகி, காதலாக அது மாறியது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக இருவரும் காதலித்துள்ளனர். உங்கள் வீட்டில் பேசி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கவிதா வலியுறுத்தவே கார்த்திக்கும் அதற்கு சம்மதித்தார்.
இதைத் தொடர்ந்து கார்த்திக்கை தனது வீட்டுக்கு கவிதா அழைத்துச் சென்று பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் காதலர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு குடித்தனத்தை ஆரம்பித்தனர். முறைப்படி கல்யாணம் செய்து கொள்ளாமல் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந் நிலையில் திடீரென டார்வின் மாகாணத்திற்கு இடமாறுதலாகி சென்றார் கார்த்திக். இதை கவிதாவிடம் அவர் சொல்லவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, தனது பெற்றோர், அண்ணன்களை அழைத்துக் கொண்டு, அவர்களுடன் டார்வினுக்குப் பறந்தார். கார்த்திக்கை சந்தித்து திருமணம் குறித்து பேசியுள்ளனர்.
அதற்கு கார்த்திக், கிறிஸ்தவ மதத்திற்கு கவிதா மாறினால்தான் கல்யாணம் சாத்தியம் என்று கூறியுள்ளார். அதற்கு கவிதாவும் ஒப்புக் கொண்டார்.
இந் நிலையில் திருச்சியில், கார்த்திக்கின் பெற்றோர் அவருக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கார்த்திக்குக்கும் நிச்சயமானது.
வருகிற 15ம் தேதி திருச்சியில் உள்ள சர்ச்சில் கல்யாணம் நடைபெறுவதாக இருந்தது.
கல்யாணத்தையொட்டி கார்த்திக், கவிதாவுக்குத் தெரியாமல் திருச்சிக்குக் கிளம்பினார். இது கவிதாவுக்கு ஒரு நண்பர் மூலம் தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த கவிதா, சட்டென்று சுதாரித்துக் கொண்டு அதே விமானத்தில் டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணித்தார். இது கார்த்திக்குக்குத் தெரியவில்லை.
இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர். பின்னர் திருச்சிக்குப் பயணமானார் கார்த்திக். கவிதாவும் விடாமல் பின் தொடர்ந்தார். திருச்சி வந்த பிறகுதான் கார்த்திக்கின் கல்யாண மேட்டர் கவிதாவுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ஆஸ்திரேலியாவில் உள்ள தனது பெற்றோர், சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் திருச்சிக்கு வந்தனர்.
பின்னர் திருச்சி கலெக்டர் சவுண்டையாவுக்கு கவிதாவின் பெற்றோர் தகவல் தொரிவித்தனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர், கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் ராஜசேகரன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரகதம் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கல்யாணத்தை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட சர்ச்சுக்கு போலீஸார் உத்தரவிட்டனர். மேலும் சேலம் பெண் வீட்டாருக்கும் தகவல் பறந்தது. இதனால் கல்யாணம் நின்று போனது.
கார்த்திக் தியோடர் மற்றும் அவரது பெற்றோரிடம் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து, குடும்பமும் நடத்தி விட்டு தப்பி ஓடி இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்ய முயன்ற காதலனை, விமானத்தில் துரத்தி வந்து கல்யாணத்தை நிறுத்திய பெண்ணின் செயல் திருச்சியை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications