ஏர் இந்தியா-இப்போதைக்கு புதிய விமானங்கள் இல்லை!
ரூ.7200 கோடி நஷ்டம் காரணமாக தடுமாறிக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். இதனால் ஜூன் மாத சம்பளத்தைக் கூட இன்னும் பெரும்பாலான ஊழியர்களுக்குத் தரவில்லை.
இந்த நிலையில் விமான நிறுவனத்துக்குப் புதிய விமானங்களை வாங்க சர்வதேச விமான தயாரிப்பாளர்களுடன் போட்ட ஒப்பந்தங்கள், பணமில்லாததால் நிறைவேறாமல் நிற்கின்றன.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஏர் இந்தியாவின் பங்குகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தை புதிய விமானங்கள் வாங்கப் பயன்படுத்துவதென்றும், குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கி நிர்வாக நெருக்கடியைத் தீர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் இன்று ராஜ்ய சபையில் தெரிவித்தார். மேலும் நிறுவனத்தை மேம்படுத்த ஏர் இந்தியாவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இந்த உதவியை எப்போது செய்வார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி புதிய விமானங்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.