சென்னை-கோலாலம்பூர்: விமான நிறுவனங்கள் போட்டா போட்டி!
பெடாலிங் ஜயா (மலேஷியா): சென்னை - கோலாலம்பூர் மார்க்கத்தில் விமானங்களை இயக்க பல்வேறு விமான நிறுவனங்கள் கடுமையாக மோதுகின்றன.
இந்த மார்கத்தில் முதலிடத்தைப் பிடிக்க பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன மலேஷியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா மற்றும் ஜெட் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள்.
நாட்டின் நான்காவது பெரிய நகரமான சென்னையிலிருந்து இப்போது அதிக பயணிகள் மலேஷியத் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிக்கிறார்கள்.
எனவே தலைநகர் டெல்லியிலிருந்து கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்குவதில் காட்டுவதை விட கூடுதல் அக்கறையை இப்போது சென்னை - கோலாலம்பூர் மார்க்கத்தில் காட்டுகின்றனர்.
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ், தாய் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களும் சென்னை - கோலாலம்பூர் மார்க்கத்தையே குறிவைத்து கட்டணக் குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தப் போட்டி காரணமாக பயணிகளின் கட்டணத்தில் 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் மேற்கொள்வோருக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. கோலாலம்பூரிலிருந்து புறப்படும் இந்த விமானம் ஒரு இரவு கொழும்பில் தங்கும். அந்த ஒரு இரவை பயணிகள் சொந்த செலவில் கழிக்கலாம். பின்னர் அங்கிருந்து சென்னைக்குப் பயணமாகும். இதற்கு ரிட்டர்ன் டிக்கெட்டோடு சேர்த்து கட்டணம் 788 மலேஷிய ரிங்கிட்தான். ஆகஸ்ட் 30ம் தேதிவரை இந்த சலுகை தொடர்கிறது. ஒரே டிக்கெட்டில் இரு நாட்டு தலை நகரங்களில் தங்க வாய்ப்பு கிடைக்குமல்லவா...
ஜெட் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் பயணிகளுக்கு பெரும் கட்டண சலுகைகளை அறிவித்துள்ளன.
ஆனால் ஸ்ரீலங்கா ஏர்வேஸ் தரும் சலுகை அளவுக்கு கவர்ச்சிகரமாக மேற்கண்ட நிறுவனங்கள் சலுகை அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்கெட் நிலைமைகளைப் பொறுத்து மேலும் கட்டணக் குறைப்புகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படும் என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications