2 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் குளோரைடு தடையை நீக்ககோரி 3000 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டது. 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
மின் கட்டணம் உயர்வு காரணமாக தமிழகத்தில் இயங்கி வந்த தீப்பெட்டி தயாரிக்கும் முலப்பொருளான குளோரைடு தொழிற்சாலைகள் மூடப்பட்டது. இதனால் பாண்டிசேரியில் இருந்து குளோரைடு வரவழைக்கப்பட்டு தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்திற்கு குளோரைடு கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆயிரக்கனக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது.
தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பாண்டிசேரியில் இருந்து கொண்டு வரப்படும் மூலப்பொருளுக்கு தடை நீக்க கோரியும், குளோரைடு தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி வந்தனர்.
இதன் பொருட்டு ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய அறிவிப்பு செய்திருந்தனர். இதன்படி இன்று கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள பகுதி இயந்திரம் மற்றும் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் என 3 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டது.
2 லட்சம் தொழி்லாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications