அரசுடன் உடன்பாடு-டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், உதவித் தொகையை உயர்த்தித் தரக் கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 3 நாட்களாக அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அரசு அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது என்று கூறி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில், இன்று பயிற்சி டாக்டர்கள் சங்கப் பிரதிநிதிகள், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துடன் 4வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அமைச்சரிடம் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முதல்வர் மீது நம்பிக்கை வைத்து இந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த 15 நாட்களாக நடந்து வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது.
இனி அரசு மருத்துவமனைகளில் இயல்பு நிலை திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.