ரீட்டா பகுகுணா பேசியது தவறு- சரியல்ல: ராகுல் காந்தி
அமேதி: உ.பி. காங்கிரஸ் தலைவி ரீட்டா பகுகுணா ஜோஷி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதேசமயம், உ.பி. அரசு செயல்படவில்லை என்று அவர் வெளியிட்ட ஆதங்கம் சரியானதே என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
உ.பி. மாநிலம் அமேதியில் பெரும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் மின்வெட்டு பரவலாக உள்ளது.
அமேதியில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று அமேதிக்கு வந்தார் அத்தொகுதி எம்.பியான ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பின்னர் முதல் முறையாக அமேதி வந்த ராகுல் காந்தி கட்சியினர் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், உ.பி. மாநிலத்தில் யானைகளுக்கும் (பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம்), பிறருக்கும் சிலைகள் வைக்க நிறைய இடம் உள்ளது.
அதேசமயம், வளர்ச்சித் திட்டங்களுக்கும், சீரான மின் விநியோகத்திற்கும் அரசு இடம் தர வேண்டும்.
காங்கிரஸ் கட்சி உ.பியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய நேரம் வ்நது விட்டதாகவே நான் உணர்கிறேன்.
ரீட்டா பகுகுணா ஜோஷி பேசியது, பேசிய தொணி, வார்த்தை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவை சரியல்ல.
இருப்பினும் ஜோஷியின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உ.பி. அரசு செயல்படவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அது சரியானதே. உ.பியில் எங்கு போனாலும் அரசின் செயல்படாத தன்மையைக் காண முடிகிறது.
ஜோஷி மீது நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் தலைவரும், மூத்த தலைவர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அது எனது வேலையல்ல.
டெல்லியிலிருந்து மத்திய அரசு உ.பி. அரசுககு அனுப்பி வைக்கும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் ஏழைகளைப் போய்ச் சேருவதை காங்கிரஸ் கட்சி கண்காணிக்கும். அது எங்களது கடமை. பெருமளவு பணத்தை நாங்கள் அனுப்பி வைத்து, அதை இங்குள்ள அரசு வீணடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் ராகுல்.
சமீபத்தில் உ.பியை விட டெல்லியில் மிகப் பெரிய அளவில் மின் வெட்டு நிலவியது என்பது நினைவிருக்கலாம். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் அப்போது பெரிய அளவில் வருத்தம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் நினைவு கூறத் தக்கது.