சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ்!
பெங்களூர்: பிரபல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் தனது சென்னை தொழிற்சாலையின் குறிப்பிட்ட சில உற்பத்தி யூனிட்டுகளை மட்டும் பெங்களூருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பல விதங்களில் பெங்களூர் வசதியான நகரமாக இருப்பதாலேயே இந்த முடிவை ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் இச் செய்தி குறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை அந் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, உலகம் முழுக்க மூலதனப் பொருட்களை தேவைக்கேற்ப எங்கள் தொழிற்சாலைகளுக்கிடையே பரிமாறிக் கொள்வது இயல்புதான். இங்கிருந்து ஒரு பிரிவை இடம் மாற்றுகிறோம் என்றால், வேறு ஒரு பிரிவை இங்கே இடம் மாற்றுகிறோம் என்று அர்த்தம், என்று கூறினார்.
200 மில்லியன் டாலரை தமிழகத்தில் முதலீடு செய்வதாக ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் உறுதியளித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த நிறுவனத்துக்கு 250 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்தான் இந்த இடம் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது தமிழக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மூலப் பொருள் சப்ளையை நிறுத்தி வைத்துள்ளது ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ்.
இரு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்நிறுவனத்தின் புதுச்சேரி யூனிட் முற்றிலுமாக மூடப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications