சென்னை: நள்ளிரவில் பயங்கர தீ-5 பேர் பலி
சென்னை: சென்னை கொருக்குப் பேட்டையில் நேற்று நள்ளிரவில் நேர்ந்த பயங்கர தீவிபத்தில் 5 பேர் பலியானார்கள்.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரில் கூவம் கரையோரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 12.40 மணி அளவில் ஒரு குடிசையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த குடிசைகளுக்கும் தீ பரவியது.
இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர தீவிபத்தில், தீயில் கருகி மேரி (30), சங்கீதா (9), சஞ்சய் (4), ஆனந்தன் (50), விஜயலட்சுமி (42) ஆகியோர் பலியானார்கள்.
இவர்களில் ஆனந்தன், விஜயலட்சுமியைத் தவிர மற்ற 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேரியின் கணவர் தமிழ் பலத்த காயம் அடைந்தார். பலியான ஆனந்தன் ஊனமுற்றவர். தீயில் சிக்கிக் கொண்ட இவர் வெளியேற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். மொத்தம் 40 குடிசைகள் தீயில் கருகி விட்டன. லட்சக்கணக்கான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
குடிசையில் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் தீ பரவியதும் மற்ற குடிசைகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துள்ளன. இதனால்தான் தீ பெரும் விபத்தாக மாறியுள்ளது.
தகவல் கிடைத்ததும் மேயர் மா.சுப்பிரமணியன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தினார்.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு, தீ விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டமக்களுக்கு ஆறுதல் கூறினார். நிவாரண பணிகள் பற்றி கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரண உதவிகள் செய்ய வேண்டும் என மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.