மொபைல் எண் 'போர்ட்டபிலிட்டி' சேவையில் இழுபறி!
டெல்லி: மத்திய அரசின் தாமதத்தால் செப்டம்பர் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட மொபைல் போன் போர்ட்டபிலிட்டி சேவையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த சேவை தொடங்காது எனத் தெரிகிறது.
இந்த சேவைக்கான விதிமுறைகளையே இன்னும் மத்திய தொலைத் தொடர்புத் துறை உருவாக்காமல் உள்ளதாம்.
போர்ட்டபிலிட்டி சேவை என்பது, ஒரு மொபைல் போன் வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்தின் சேவையிலிருந்து இன்னொரு நிறுவன சேவைக்கோ அல்லது ஒரே நிறுவனத்தின் ஒரு தொழில்நுட்பத்திலிருந்து இன்னொரு தொழில்நுட்பத்திற்கோ மாறினால், அவருடைய எண் மாறாமல் அதே எண்ணில் தொடர முடியும்.
இந்த அருமையான சேவையைத் தொடங்கத்தான் மத்திய அரசு இந்த இழு இழுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சேவைக்கான விதிமுறைகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் செப்டம்பர் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது நடக்காது என்று தெரிகிறது.
இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவை அமலுக்கு வரும்.
இந்த சேவை என்பது ஒரு புதிய சிந்தனையாகும். எனவே அதற்கேற்ப விதிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. அந்தப் பணி நடந்து வருகிறது என்றார்.
தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்தான் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து டிராய் தலைவர் ஜே.எஸ்.சர்மா கூறுகையில், ஏற்கனவே விதிமுறைகள் குறித்த வரைவு ஆவணம் தயாராகி விட்டது. ஜூலை 27ம் தேதி இதுதொடர்பாக திறந்தவெளி விவாதம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இது இறுதி செய்யப்படும் என்றார்.