தனியாருக்கு சாதகமாக செயல்பட்ட தமிழக மின்துறை!
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தவறான அணுகுமுறையால் தனியார் மின் உற்பத்தியாளருக்கு ரூ.53.18 கோடி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை அக்கெளண்டன்ட் ஜெனரல் சங்கர் நாராயண் கூறியுள்ளதாவது:
துணை மின் நிலையம், மின் கடத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்காததால் 2008ம் ஆண்டுடன் முடிந்த ஐந்தாண்டுகளில் தமிழக மின் துறைக்கு ரூ.123.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2 தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்தியான மின்சாரத்தை எடுத்துக் கொள்வதற்கான துணை மின் நிலையங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் 2006 செப்டம்பர் முதல் 2007 செப்டம்பர் வரை ரூ.31.71 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின் வாரிய வழக்குகளைப் பற்றிய ஒருங்கிணைந்த தகவல் மையம் மின்சார வாரியத்தில் இல்லை. வாரியத்திற்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்த பிறகும், அந்தத் தொகை வசூலிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் தடை உத்தரவுகளை நீக்க 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பின் நகலை 15 ஆண்டுகளுக்கும் பிறகும் பெறவில்லை.
ஒரு தனியார் மின் உற்பத்தியாளருக்கு கட்டணங்கள் மற்றும் பங்கு மூலதனத்திற்கான ஆதாயம் ஆகியவற்றை வழங்கும்போது, மின் கொள்முதல் ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒழுங்குபடுத்த மின் வாரியம் தவறியுள்ளது.
இதனால் ஒரு தனிப்பட்ட மின் உற்பத்தியாளருக்கு ரூ.53.18 கோடிக்கு தேவையற்ற சலுகை அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications