ராணுவத்தை விட்டு ஓடிப் போனவர்களுக்கு ராஜபக்சே மன்னிப்பு - 1800 பேர் விடுதலை
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தை விட்டு ஓடிப் போன 1800 பேருக்கு பொது மன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இவர்களில் 50 பேர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெருமளவிலான ராணுவத்தினர் கடந்த காலங்களில் ராணுவத்தை விட்டே ஓடிப் போனார்கள்.
அவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அடங்கும். ஒரு போராளி அமைப்பின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒரு நாட்டின் ராணுவத்தினர் இந்த அளவுக்கு ஓடிப் போனது இலங்கையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது போர் முடிந்து விட்டதால் ஓடிப் போன ராணுவத்தினரை சரணடையுமாறு இலங்கை அரசு அழைப்பு விடுத்து வருகிறது. அவ்வாறு சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ராணுவத்திலிருந்து ஓடிப் போய் பிடிபட்ட 1800 பேருக்கு பொது மன்னிப்பு அளிக்க ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இவர்களில் 50 பேர் அதிகாரிகள் ஆவர்.
இவர்கள் சிறையில் ஒரு வருடத்தைக் கழித்துள்ளனர். கடந்த மாதம் 585 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து மற்றவர்களும் விடுவிக்கப்படவுள்ளதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. தற்போது புலிகளுடன் மோதல் முடிந்து விட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2003ம் ஆண்டு ராணுவத்தை விட்டு ஓடிப் போன 51 ஆயிரம் பேரை ராணுவத்திலிருந்து முறைப்படி நீக்க அரசு முடிவு செய்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications