வடக்கு-தெற்கு..தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கனுமாம்!

வட தமிழகம் தென் தமிழகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மூவேந்தர் முன்னணி கழகத் தலைவருமான டாக்டர் என்.சேதுராமன் மற்றும் வன்னியர் சங்க கூட்டமைப்புத் தலைவர் ஏ.கே. நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,
மொழி வாரியாக மாகாணம் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தின் மக்கள் தொகை 3 கோடியாக இருந்தது. தற்போது சுமார் 7 கோடியை தொடும் நிலையில் உள்ளது.
எனவே நிர்வாக வசதி கருதி, இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு தமிழகத்தை காவிரிக் கரையை எல்லையாகக் கொண்டு வட தமிழகம், தென் தமிழகம் என்று இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 11 மாகாணங்கள் இருந்தன. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இன்று 32 மாநிலங்கள் உருவாகியுள்ளன.
தெலுங்கானா, போஜ்புரி, கூர்க்காலாந்து, மித்திலாஞ்சல் உட்பட பல்வேறு புதிய மாநிலங்களுக்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரித்தால்தான் சமமான வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
எனவே தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு நடைபயணம், தொடர் கருத்தரங்கம் நடைபெறும்.
மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிற சந்திரசேகர் ராவ், அஜீத் சிங் உள்ளிட்ட தலைவர்களை சென்னைக்கு அழைத்து மாநாடு ஒன்றையும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றனர்.
வன்னியர் சங்க கூட்டமைப்புத் தலைவர் ஏ.கே. நடராஜன் வைக்கும் இதே கோரிக்கையை பாமக நிறுவனர் டார்டர் ராமதாசும் சில ஆண்டுகளுக்கு முன் கோரியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications