கார் இறக்குமதி ஊழல்-துபாய் நபர் சென்னையில் கைது

துபாய்க்குக் கிளம்பத் தயாராக இருந்தபோது செல்வா, அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ காரை வாங்கிய சுஷ்மிதா சென் அதற்குரிய ஆக்ட்ராய் வரியைக் கட்டவில்லை என்துதான் சுஷ்மிதா சென் மீதான சர்ச்சை. இதற்காக மும்பை மாநகராட்சி அவருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து சுஷ்மிதா சென்னை பாம்பே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
இந்த விசாரணையில் மிகப் பெரிய அளவில் இறக்குமதி கார் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. செல்வாவின் தொடர்பு தெரிய வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் உஷார் தகவலை அனுப்பியது பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு.
இந்த நிலையில், துபாயிலிருந்து இந்தியா வந்திருந்த செல்வா சென்னை வழியாக துபாய் கிளம்பவிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சென்னை வந்த மும்பை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்தில் வைத்து செல்வாவை வளைத்துப் பிடித்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து கடந்த 2004ம் ஆண்டு லேன்சர் கார் ஒன்றை போலியான ஆவணங்கள் மூலம் மும்பைக்கு இறக்குமதி செய்தார் செல்வா. பின்னர் அவற்றின் ஆவணங்கள், சேஸிஸ் எண் ஆகியவற்றை மாற்றி விற்றார்.
இதை ஹரேன் சோக்ஸி என்ற ஏஜென்டுக்கு அவர் விற்றார். இதையடுத்து ஹரேன் சோக்ஸியை மும்பை போலீஸார் ஜூன் மாதம் கைது செய்தனர்.
சோக்ஸிதான் இறக்குமதி கார் ஊழலில் முக்கியப் புள்ளி ஆவார். போலியான ஆவணங்களைக் காட்டி அரசின் சலுகைகளைப் பெற்று இவர் கார்களை இறக்குமதி செய்து அவற்றை உள்ளூரில் விற்று விடுவார். இவருக்கு கார்களை அனுப்பி வைப்பது செல்வாவின் வேலை.
மும்பை தவிர கொச்சி, சென்னை, கொல்கத்தா, கேரளாவிலும் சோக்ஸி இறக்குமதி கார்களை விற்றுள்ளார்.
இவரிடமிருந்துதான் 2006ம் ஆண்டு சுஷ்மிதா சென் ரூ. 56 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ காரை வாங்கினார். ஆனால் இதற்கான ஆக்ட்ராய் வரியைக் கட்டவில்லை என்று கூறி மும்பை மாநகராட்சி அவருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தது.
இந்தக் கார் 2004ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று சேஸிஸ் எண் மற்றும் ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் இது 1998ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். இப்படி மொத்தத்தில் மிகப் பெரிய மோசடியை செய்து சுஷ்மிதா சென்னிடம் காரை தள்ளி விட்டுள்ளார் சோக்ஸி.
இதையடுத்தே இந்த மோசடி வழக்கை விசாரிக்குமாறு பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பாம்பே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சோக்ஸி மோசடியாக 37 வாகனங்களை இறக்குமதி செய்தது தெரிய வந்தது. அவற்றில் 24 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications