For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத் தேர்தல் - சரத் கட்சி, மனித நேயக் கட்சிகளும் புறக்கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆகஸ்டு 18-ந் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர் மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.

மறுசீரமைப்பிற்கு முன் உள்ளடக்கிய பகுதிகளை கொண்ட இத்தொகுதிகள், 2011 பொதுத் தேர்தலின்போது பெரும் மாறுதல்களுக்கு உட்படும். அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலமே இருக்கின்ற நிலையில் இத்தொகுதிகளில் தற்சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களால் குறுகிய காலத்தில் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

ஒரு அரசியல் இயக்கத்தின் ஜனநாயக கடமை, வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் போட்டியிடுவதுதான் என்றிருந்தாலும், இடைத்தேர்தல் மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதி விட முடியாது.

எனவே, 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகளில் முழுமையான கவனம் செலுத்தி முழுமூச்சோடு செயல்படுமாறு தொண்டர்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி ..

இதேபோல மனிதநேய மக்கள் கட்சியும் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் சென்னையில் நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மனிதநேய மக்கள் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு 2011-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் எங்கும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது.

இச்சூழலில் தமிழக சட்டமன்றத்திற்கு 5 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத தேர்தல் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. எனவே, இந்த இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது.

அழைப்பு விடுத்த கம்யூ.வுக்கு நன்றி...

இளையான்குடி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் விடுத்த அன்பு வேண்டுகோள்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை சென்னையில் ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெறும் தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று அப்துல் சமது தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X