For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முடியும் மனு தாக்கல்-வருகிறது மத்திய குழு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: 5 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இந் நிலையில் மத்திய தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் குழு நாளை தமிழகம் வருகிறது.

தொண்டாமுத்தூர், பர்கூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில், கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

சனிக்கிழமை வரை தொண்டாமுத்தூர் தொகுதியில் 4 பேர், பர்கூர் தொகுதியில் 6 பேர், கம்பம் தொகுதியில் 2 பேர், இளையான்குடி தொகுதியில் 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார்.

சனிக்கிழமை வரை மனு தாக்கல் செய்தவர்கள் அனைவரும் சுயேச்சைகள். மனு தாக்கல் தொடங்கி, 6வது நாளான நேற்றுதான் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பர்கூரில் கே.அசோகன் (பாஜ), ஜி.சிவப்பிரகாஷ் (பாஜ மாற்று), வி.சந்திரன் (தேமுதிக), கே.ஆர்.கிருஷ்ணன், ஆர்.மணிகண்டன் (சுயேச்சைகள்) என 5 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

தொண்டாமுத்தூரில் எம்.சின்னராஜ் (பாஜ), ஏ.ஸ்ரீதரமூர்த்தி (பாஜ மாற்று), கே.தங்கவேலு (தேமுதிக), கே.பி.எஸ்.ரங்கராஜ் (தேமுதிக மாற்று), ஆர்.கே.மணி, ஜி.ராமசாமி, எம்.மன்மதன் (சுயேச்சைகள்) என 7 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

கம்பம் தொகுதியில் ஆர்.அருண்குமார் (தேமுதிக), ஜி.ராமராஜ் (உழைப்பாளி மக்கள் கட்சி) என 2 பேரும், இளையான்குடி தொகுதியில் பி.எம்.ராஜேந்திரன் (பாஜ), அழகு.பாலகிருஷ்ணன் (தேமுதிக), கே.சந்திரன் (தேமுதிக மாற்று), கே.கலைமணி (சுயேச்சை) என 4 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்த எம்.ராமசுப்ரமணியன், சி.மருதநாயகம், யு.நாகூர் மீரான் பீர் முகம்மது, எஸ்.ஆறுமுகராஜ் ஆகியோர் உட்பட இதுவரை மனு தாக்கல் செய்த அனைவரும் சுயேச்சைகள். தேர்தலில் தேமுதிக சார்பில் அறிவித்த 5 பேரில் நேற்று 4 பேர் மனுதாக்கல் செய்தனர்.

திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாள். ஆனால் நாளை அஷ்டமி என்பதால், இன்றே அனைத்து அரசியல் கட்சியினரும் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். 30ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாளாகும்.

ஆகஸ்ட் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா,

தொகுதிக்கு ஒரு மத்திய அரசு அதிகாரி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மத்திய தேர்தல் பார்வையாளர்கள் குழு நாளை தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்ளும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X