மன நோயால் பாதிக்கப்படும் முகாம் தமிழர்கள்
வவுனியா: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை யாருக்கும் வந்திருக்காது என்று கூறும் அளவுக்கு மோசமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது ஈழத் தமிழர்களின் வாழ்க்கை.
முகாம்கள் என்ற பெயரில் மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்கள். தடுப்பு வேலிகளைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ள அந்த அப்பாவி மக்களின் நிலை குறித்து அத்தனை பேரும் பரிதாபப்பட்டாலும் அவர்களுக்கு இதுவரை விமோச்சனத்தை ஏற்படுத்தித் தர மட்டும் யாரும் முன்வராத நிலை.
இந்த நிலையில், அங்குள்ள மக்களில் கிட்டத்தட்ட 46 சதவீதம் பேர் மன நல பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் ஈழத்தைச் சேர்ந்த மன நல மருத்துவர் டாக்டர் மகேசன் கணேசன்.
இவர் அங்கோடை மன நல மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்தப் பிரச்சினை அதிகரித்து வருவதாகவும், உடனடியாக இதை சரி செய்யாவிட்டால் தமிழ் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றம் அவர் எச்சரித்துள்ளார்.
மனநோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வவுனியா மருத்துவமனையில் இதற்கென தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம்.
முகாமிலுள்ள 40 சதவீத மக்கள் நாள்தோறும் இந்தப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிகம் பாதிக்கப்பட்ட பலர் அங்கோடைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கணேசன் கூறுகிறார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியாவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், மற்றும் சமூக நலன் விரும்பிகளின் உதவியுடன் தமது மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருவதாகக் கூறிய மருத்துவர் கணேசன், பாதிக்கப்பட்ட பலர் உறவினர்களின் உதவி இன்றி அவலப்படுவதாகவும் சுட்டிக் காட்டினார்.