For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் ராஜா குறித்த செய்தி-ஜூ.விக்கு தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சர் ராஜா குறித்த செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் இதழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் அபராதம் விதிக்கப்பட்டதற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ.ராஜா பற்றி ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை எதிர்த்து ராஜாவும், அவருடைய மனைவி பரமேஸ்வரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி ஜெயபால், ஜூனியர் விகடனுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார். பின்னர் விசாரித்த நீதிபதி கே.சந்துரு அந்த இடைக்காலத் தடையை நீக்கியதுடன் ராசாவின் அவதூறு வழக்கு மனுவை தள்ளுபடி செய்தும், வழக்கு செலவுக்காக ஜூனியர் விகடனுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராசாவும், அவரது மனைவி பரமேஸ்வரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த மனுவில், பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையான சுதந்திரம் கிடையாது. மோசடி செய்து புகைப்படத்தை வெளியிடுவது, குடும்ப உறுப்பினர்களை பற்றி தனிப்பட்ட விவரங்களை எழுதுவது என்பது, குறிப்பாக அவர்களது குழந்தைகளது உரிமையை பாதிக்கும் செயலாகும். இந்த வழக்கின் தன்மையை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு இரண்டு தரப்பிலும் விசாரித்து செய்தியை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

ஜூனியர் விகடனுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு அந்த பத்திரிகை சார்பில் பதிலளிக்கப்பட்டபோது செய்தி நூறு சதவீதம் உண்மையானதல்ல என்று பதிலளித்துள்ளது.

எனவே ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட ஜூனியர் விகடனுக்கு தடை விதிப்பதுடன் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில், ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறு செய்தி வெளியிடுவதற்கு ஜூனியர் விகடனுக்கு இடைக்கால தடை விதித்தும், தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு கூறி விகடனுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X