ஸ்வைன்-வழிகாட்டு நெறிகளை அனுப்பாத கல்வித்துறை
சென்னை: பன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்னும் விழிப்புணர்வு, வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்படாமல் உள்ளதாம்.
பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. இப்போது பள்ளிக் கூடங்களுக்கும் அது வேகமாக பரவி விட்டது. புனே நகரில் ஒரு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்திலும் பள்ளிக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பள்ளிக் கூடங்கள் தாங்களாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
ஆனால் பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து இதுவரை வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் அறிவிக்கப்படாமல் உள்ளதாம்.
குழந்தைகள் மத்தியில்தான் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கவும், வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இதுவரை தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் எந்தவித விழிப்புணவு உத்தரவோ அல்லது வழிகாட்டு நெறிமுறைகளோ அனுப்பப்டவில்லையாம்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்வித்துறையிடமிருந்து பள்ளிக் கூடங்களுக்கு எந்த உத்தரவு போவதாக இருந்தாலும் அது மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாகத்தான் போகும்.
பன்றிக் காய்ச்சல் குறித்து இதுவரை அரசிடமிருந்து எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை என்றார்.
சென்னையைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், செய்தித் தாள்களில் வரும் செய்திகளை மட்டுமே பள்ளிக்கூட நிர்வாகங்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது
பன்றிக் காய்ச்சல் தொடர்பாக செய்தித் தாள்களில் வெளியாகும் செய்திகளைத்தான் நாங்கள் படித்து வருகிறோம். இதுதொடர்பாக அரசிடமிருந்து இதுவரை எங்களுக்கு எந்தவிதமான சர்க்குலரோ அல்லது வழிகாட்டு நெறிமுறைகளோ வரவில்லை என்றார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் (pallikalvi.in) இதுதொடர்பாக எந்தவித குறிப்பும் இடம் பெறாமல் உள்ளது. மத்திய செகண்டரி கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) கூட இதுவரை எந்தவித தகவலும் இல்லை.
பன்றிக் காய்ச்சலால் ஒரு மாணவரோ அல்லது மாணவியோ பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு எத்தனை நாள் விடுப்பு கொடுக்கலாம், சுற்றுலா அழைத்துச் செல்வதாக இருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன, பிள்ளைகளை எங்கு அழைத்துச் செல்லக் கூடாது, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு இதுவரை பள்ளி நிர்வாகங்களுக்கு விளக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
3 வயது சிறுவனுக்கு ஸ்வைன்
இதற்கிடையே, சென்னை வந்த 3 வயது சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இரவு கொழும்பில் இருந்து சென்னை வந்த அந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தது. இதைத்தொடர்ந்து அவன் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.