மத்திய-மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுங்கள்: சிபிஐ
நெல்லை: விலைவாசி உயர்வு கட்டுகடங்காமல் செல்கிறது. வருகிற இடைத் தேர்தல் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுங்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுபாட்டு குழு தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
நெல்லையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தூத்துக்குடியில் துறைமுகம் வர இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நில மதிப்பு உயர்ந்து வருகிறது.
பட்டா இல்லாமல் 100 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களிடம் உள்ள நிலங்களை ஏமாற்றி சிலர் நில மோசடி செய்து வருகின்றனர். அங்குள்ள புன்செய் நிலங்களில் போலி பட்டாக்கள் போடப்படுகின்றன. அத்தொகுதியில் தொடர்ந்து நடக்கும் நிலமோசடி தடுககப்பட வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆளும்கட்சி சார்பில் அதிகார துஷ்பிரயோகம் நடந்து வருகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்துங்கள் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பணப்பட்டுவாடா இல்லாமல் இத்தேர்தல் நடக்க வேண்டும். விலைவாசியை கட்டுபடுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு இடைத் தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்.