பன்றிக் காய்ச்சல் பரவல்- நாளை கருணாநிதி தலைமையில் ஆலோசனை
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து நாளை இதற்கான உயர் மட்டக் குழு எனது தலைமையில் கூடி ஆலோசனை நடத்தும்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இதேபோன்ற ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. அதுபோல இங்கும் நடத்தப்படுகிறது.
பரவலைத் தடுக்கவும், இதுதொடர்பான சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை. பீதி ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடாமல் தவிர்ப்பது பத்திரிக்கையாளர்கள் மற்றும் படித்தவர்கள் கடமை என்றார்.
சென்னையில் 3 சிறப்பு மையங்கள்
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை நகரி்ல 3 சிறப்பு பன்றிக் காய்ச்சல் கண்டறியும் மற்றும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் தலா 30 டாக்டர்கள் அடங்கிய குழு நிலை கொண்டிருக்கும். மொத்தம் 90 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இங்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகப்படுவோர் வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது.