காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி வழக்கு
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்கின்றனர்.
இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் 7ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் இதுவரை தண்ணீர் வரவில்லை.
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் காவிரியின் முகத்துவாரமான டெல்டா மாவட்டங்களை முழுவதுமாக வந்தடையவில்லை. 14 நாட்கள் ஆகியும் இதுநாள் வரை இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கால்வாய்களுக்கும் தண்ணீர் வந்து சேரவில்லை.
இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் உள்ள நிலையிலும் அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்யத் தவறிவிட்டனர். எனவே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு 15,000 கன அடி தண்ணீரை தொடர்ந்து 3 வார காலத்திற்கு திறந்துவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.