இளையாங்குடியில் ஜெயா டிவி குழு மீது தாக்குதல்
இளையாங்குடி: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததைப் படம் பிடித்த ஜெயா டிவி குழுவினர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கேமரா உடைக்கப்பட்டது. மக்கள் திரண்டதால் உடைக்கப்பட்ட கேமரா பாகங்களை எடுத்துக் கொண்டு திமுகவினர் தப்பி விட்டனர்.
இளையாங்குடி தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி என்ற இடத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ரூ 1 கோடி பணத்துடன் முகாமிட்டிருப்பதாகவும், முதல் கட்டமாக ரூ. 200, 2வது கட்டமாக ரூ. 500, 3வது கட்டமாக ரூ. 1000 தரப் போவதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து அங்கு ஜெயா டிவி செய்தியாளர் ரகு தலைமையில் குழுவினர் விரைந்தனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை அவர்கள் படம் பிடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த பணம் கொடுத்தவர்கள், சரமாரியாகத் தாக்கினர். கேமரா பறிக்கப்பட்டு கீழே போட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மக்கள் திரண்டதால் உடைக்கப்பட்ட கேமராவை எடுத்துக் கொண்டு பணம் கொடுத்தவர்கள் தப்பி விட்டனர்.
இந்த சம்பவத்தால் திருப்பாலைக்குடியில் பரபரப்பு நிலவுகிறது.