வீழ்ச்சியிலிருந்து மீட்சிக்குத் திரும்பும் ஆறு முக்கிய நாடுகள்!
உலகின் ஆறு முக்கிய நாடுகள் பெருமந்தம் எனப்படும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நாடு தனது பொருளாதாரம் எதிர்பாராத விதமாக நல்ல பாதைக்குத் திரும்பிவிட்டதாகவும், தொழில்துறை மற்றும் பணிகள் துறையில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனை ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளுக்கும் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியும் தங்கள் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாகக் கூறியுள்ளது. உண்மையில் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கள் மொத்த உற்பத்தி 0.3 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என எதிர்ப்பார்த்ததாகவும், ஆனால் அந்த அளவை விட அதிக வளர்ச்சியை இப்போது பெற்றுள்ளதாகவும் இருநாடுகளும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன.
மற்ற 3 நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஏற்கெனவே வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி இரு நாடுகளிலுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
வீழ்ச்சியிலிருந்து எழுந்து வந்துள்ள அடுத்த பெரிய நாடு பிரேசில். ஜப்பானும் தங்கள் பொருளாதார நெருக்கடிகள் தீரத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் அதேநேரம், உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் அளவு பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்றவை இன்னும் மந்த நிலையிலிருந்து மீட்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் அல்லது அக்டோபருக்குப் பிறகுதான் தங்கள் நாட்டின் பொருளாதார மீட்சி குறித்த சரியான விவரங்கள் தெரியும் என்கிறது அமெரிக்கா. இப்போதைக்கு நிதித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறைய ஆரம்பித்துள்ளதை ஒரு நல்ல அறிகுறியாகக் கருதுகிறது அமெரிக்கா.