காங்கிரஸார் அடிதடி-பெண்கள் அலறி ஓட்டம்!
கடையநல்லூர்: தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேடை பார்வையாளராக கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாநவஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் நகர, வட்டார காங்கிரஸ் பிரமுகர்களை சந்திக்க கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சின் அலுவலகத்திற்கு வந்தார். அவரை வரவேற்கவும், சந்திக்கவும், நூற்றுக்கனக்கான காங்கிரசார் வந்திருந்தனர். எம்எல்ஏ அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்டத்தினரை செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜோதிலிங்கம் ஓழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது நெல்லை மாவட்ட ராகுல்காந்தி பேரவை தலைவர் கணேசனுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த காங்கிரஸ் மகளிர் அணியினர் சிதறி ஓடினர்.
சண்டையில் ஜோதிலிங்கத்தின் சட்டை கிழிந்தது. பீட்டர் அல்போன்சின் உதவியாளர் புலவர் செல்வராஜ், வட்டாரத் தலைவர் சுந்தரைய்யா, திவான் கடையநல்லூர் நகராட்சி தலைவர் இப்ராகீம் ஆகியோர் இருவரையும் அமுக்கிப் பிடித்து சமாதானம் செய்தனர்.
இருந்தபோதும் இருவரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் மகளிர் அணியினர் கட்டிடத்திற்குள் நுழையாமல் ரோட்டிலேயே நின்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் பிரமுகர்களுக்குள் மேலிட பார்வையாளர் முன்பு நடந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications