அத்வானி பதவி விலக வலியுறுத்தவில்லை-ஆர்எஸ்எஸ்
சென்னை: அத்வானியை பதவி விலகுமாறு வலியுறுத்தியதாக வெளிவந்த செய்திகளை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மறுத்துள்ளார்.
பாஜக தலைவர் அத்வானியை கடந்த 10ம் தேதி மோகன் பகவத் தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அத்வானியை பதவியில் இருந்து விலகக் கூறியதாகவும், அடுத்து தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பகவத், வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், இந்தச் செய்திகளில் உண்மையில்லை என்று கூறிய அத்வானி, இது போன்ற தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மோகன் பகவத் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
பாஜக ஒரு தனி கட்சி. அதன் விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் தலையிட முடியாது. அந்த கட்சி விஷயங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது எங்கள் வேலை இல்லை. நாங்கள் தேச சேவையை மட்டும் குறிகோளாகக் கொண்டு செயல்படுகிறோம்.
அத்வானி பதவி விலக வேண்டும் என நாங்கள் எந்த உத்தரவும் வழங்கவில்லை. நாங்கள் சந்தித்து கொண்ட போதும் நாட்டின் நன்மை குறித்து தான் பேசினோம். அரசியல் பேச இல்லை.
அத்வானி அனுபவம் வாய்ந்த தலைவர் அவருக்கு யாரும் ஆலோசனை சொல்ல தேவையில்லை. மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது நாட்டின் பாதுகாப்பு கவலைக்கிடமாக இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்டு 84 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இது இயக்கம் ஜாதி, மத பகுபாடு இல்லாமல் மக்கள் சேவையில் முன்னிறுத்தி கொண்ட இயக்கம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு அங்குள்ள இந்து அமைப்புகள் மூலம் நிவாரணங்கள் வழங்க முயற்சித்து வருகிறோம் என்றார் மோகன் பகவத்.