புயல் சின்னம்-தமிழகம் முழுவதும் கன மழை

சென்னை நகரிலும், புறநகர்களிலும் கன மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.
தமிழத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் நல்ல வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் தொடர்ந்து மழை பெய்தது. வெள்ளிக்கிழமை விடிய விடிய மழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நேற்றிரவும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை நீடித்தது.
சென்னையில் இன்று காலை 6 மணிக்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது
இன்று காலை சூரியனையே பார்க்க முடியவில்லை. வானம் இருண்டு கிடந்தது. காலை 7 மணிக்கு மேல் மழை கொட்டத் தொடங்கியது. அப்போது முதல் விடாமல் மழை பெய்து வருகிறது.
சில பகுதிகளில் நல்ல மழையும், பெரும்பாலான பகுதிகளில் லேசான மழையும் பெய்து கொண்டிருக்கிறது.
காற்று இல்லாத காரணத்தால் மழை நின்று பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகள் அனைத்திலும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
காலையில் மழை பெய்யத் தொடங்கியதால், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்களுக்கு செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்தது.
புயல் சின்னம்...
தென் மேற்குப் பருவமழை வலுத்துள்ளதாலும், வங்கக் கடலி்ல ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் லேசானது முதல் கன மழை பெய்யக் கூடும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு 1.1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்றிரவு 2 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
ஊட்டியிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சியில்...
திருச்சியில் நேற்று மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மின்னல் தாக்கி சிதம்பரத்தில் இருவர் பலி...
சிதம்பரத்தில் நேற்று கன மழையுடன் இடியும், மின்னலும் சேர்ந்து மிரட்டியது. அப்போது கொள்ளிடம் ஆற்று பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரவேலு (50), தங்கமணி (50), காத்தாயி (48) ஆகியோர் மீது மின்னல் தாக்கியது.
இதில் சிங்காரவேலு உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அருகில் மேய்ந்து கொண்டிருந்த 14 ஆடுகளும் பலியாயின.
இதே போல் சிதம்பரத்துக்கு அடுத்த கோழிப்பள்ளம் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த காந்திராஜன் (40) என்பவரும் மின்னல் தாக்கி பலியானார்.












Click it and Unblock the Notifications