வாக்காளர்களுக்கு பணம்-குப்தாவிடம் தேமுதிக புகார்
சென்னை: வாக்குசாவடிகளுக்கு அருகே திமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் போட்டு பணம் கொடுத்து வருவதாக தேமுதிக அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவிடம் புகார் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுகவினர் வாக்குசாவடிகளுக்கு வரும் மக்களூக்கு டோக்கன் ஒன்றை கொடுப்பதகாவும், ஓட்டு போட்டு திரும்பும் போது அந்த டோக்கனை வாங்கி கொண்டு ரூ. 200 முதல் ரூ. 300 வரை பகிரங்கமாக பணம் கொடுப்பதாகவும் தேமுதிக அவை தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நேரஷ் குப்தாவை சந்தித்து புகார் ஒன்றையும் கொடுத்தார். மேலும், இது போன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். இதையடுத்து நரேஷ் குப்தா, போலீஸ் அதிகாரிகள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஏற்கனவே திமுகவினர் அனைவருக்கும் ஒரு ரவுண்ட் பணம் பட்டுவாடாவை முடித்துவிட்டனர். தற்போது வாக்குபதிவு நடக்கும் இடங்களுக்கு அருகில் வைத்து பணம் கொடுப்பதன் மூலம் நடுநிலைமையில் இருக்கும் வாக்காளர்கள், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் போன்றவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடக்கிறது என தேமுதிக நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.