கருவில் 12 குழந்தைகளை சுமக்கும் துனீஸிய பெண்!
துனீஸ்: துனீஸியாவை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அதில் விசேஷம் இல்லை. ஆனால் அவரது வயிற்றில் 12 குழந்தைகள் வளருகின்றன என்பதால் பெரும் அதிசயமாகியுள்ளார்.
12 குழந்தைகளையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரசவிக்க டாக்டர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
துனீஸியாவை சேர்ந்தவர் நாடியா சுலேமான். 30 வயதாகும் இவர் ஒரு ஆசிரியை. கடந்த பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தது. அவருக்கு அடிக்கடி கருச்சிதைவும் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பமானார். அவரை சோதித்த டாக்டர்கள், அவரது கருப் பையில் 12 கருக்கள் வளர்ந்து வருவதை கண்டுபிடித்து வியப்படைந்தனர்.
இதுகுறித்து நாடியாவின் கணவர் மர்வான் கூறுகையில், முதலில் நாங்கள் இரட்டை குழந்தை என்று தான் நினைத்தோம். தற்போது எண்ணிக்கை அதிகரிக்க எங்களுக்கு மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது என்றார்.
நாடியா கூறுகையில், எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அதை என்னால் பிரசவம் வரை சுமக்க முடியும். அனைத்து குழந்தைகளையும் பெற்றெடுத்து என்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இதையடுத்து அந்த 12 குழந்தைகளையும் பத்திரமாக பிரசவிக்க முடியுமா என டாக்டர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இது குறித்து பிரசவ நிபுணர் டாக்டர் மேன்னி ஆல்வரெஸ் கூறுகையில்,
கருவில் பல குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே. பொதுவாக ஒரு கருவில் ஐந்து குழந்தைகளுக்கு மேல் இருப்பது மிகவும் ஆபத்தானது. கருவில் இருக்கும் குழந்தைகளை பெரும்பான்மையானவற்றை அவர் பெற்றெடுத்தாலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி விடும்.
சில காலத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இவரை போன்ற பெண்மணிகளுக்கு குறைபிரசவம் உண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்றார்.
12 குழந்தைகளை கருவில் சுமப்பதால், துனீஸியாவின் அதிசயமாகியுள்ளார் நாடியா.












Click it and Unblock the Notifications