நர்ஸ் படிப்பு- 'பெண்கள் மட்டுமே சேரலாம்'
சென்னை: செவிலியர் படிப்பை பெண்கள் மட்டுமே படிக்க முடியும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசாத் அலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், நான் பிளஸ் 2 தேர்வில் 61 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு நடத்தும் செவிலியர் (நர்ஸ்) டிப்ளமோ படிப்புகளில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் 07.12.08-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டார்.
எல்லா மருத்துவமனைகளிலும் ஆண் செவிலியர்களுக்கு தேவை உள்ளது. செவிலியர் படிப்பில் 1:9 என்ற விகிதத்தில் ஆண், பெண் சேர்க்கை இருந்தது. செவிலியர் படிப்பிற்கு பெண்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இந்த ஆண்டு விதிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைவருக்கும் சம உரிமை என்பதை மீறும் வகையில் உள்ளது. எனவே, எனக்கு விண்ணப்பம் வழங்க உத்தரவிட வேண்டும். செவிலியர் படிப்பில் சேர்ப்பது குறித்து பரிசீலிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி சுகுணா விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், செவிலியர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி மகப்பேறு மருத்துவத்தில் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பிறகும் ஆண் செவிலியர்களை பெண்கள் விரும்பவில்லை. எனவே, மகப்பேறு மருத்துவத்தில் ஆண்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது.
மகப்பேறு மருத்துவத்தில் பயிற்சி பெறாமல், செவிலியர்களுக்கான படிப்பு முழுமையடையாது. எனவே, ஆண்களைச் சேர்க்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 2045-ம் ஆண்டு வரை மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு தேவையான ஆண் செவிலியர்கள் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசு முழுமையாக ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளது.
எனவே, சுகாதார நோக்கில் பார்த்தாலும், சமூக நல நோக்கில் பார்த்தாலும் பெண்கள் மட்டும்தான் செவிலியர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்க வேண்டியுள்ளது.
எனவே, இதுதொடர்பான அறிவிப்பாணை செல்லும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications