சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2வது பலி
சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 2 பேர் இறந்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (47). மீனவரான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.
தப்பி ஓடியவர்..
பிரான்சிஸ் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இடையில் திடீரென அவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரைத் தேடிப் பிடித்து மீண்டும் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இடையில் அவர் சிகிச்சையிலிருந்து விடுபட்டு ஓடியதால் அவருக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாகி விட்டது. இதுவே அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனளிக்காமல் போனதற்குக் காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் ஏற்கனவே பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தான். இந்த நிலையில் தற்போது 2வது பலி ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் இறந்தோரின் எண்ணிக்கை இதன் மூலம் 45 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 3 பேருக்கு அறிகுறி..
இந் நிலையில் சிங்கப்பூர், கொழும்பு, துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய 3 பேருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி காணப்பட்டதால் அவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி- 3 பேருக்கு ஸ்வைன் இல்லை..
இந் நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் அந்த நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.