ஆன்லைன் வர்த்தகம்: தடைசெய்ய சரத்குமார் கோரிக்கை!
சென்னை: உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆன்லைன் வர்த்தகமே. எனவே அதனை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரிசி விலை ஏற்கனவே இறக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கிறது. அதிக மக்கள் பயன்படுத்தும் சன்ன ரக அரிசி ஒரு கிலோ ரூ.20 முதல் 22 வரையாக இருந்தது இப்போது ரூ.35 முதல் 40 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் ஒரு கோடி டன் அளவுக்கு அரிசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மத்திய மந்திரி அறிவித்து இருப்பது நமக்கு எல்லாம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு என்ன காரணங்கள் என்பதை அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரிசி ஏற்றுமதிக்கு தடை இருக்கின்றபொழுது பாசுமதி அரிசி மட்டும் பிரத்யேகமாக ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. பாசுமதி அரிசி என்கிற பெயரில் சன்னரக அரிசியும், சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுவிடாமல் மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
பெரிய நிறுவனங்களின் பதுக்கல்!
ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற அரிசி ரூ.40-க்கும், ரூ.40-க்கு விற்ற துவரம் பருப்பு ரூ.85-க்கும், ரூ.40-க்கு விற்ற உளுந்து ரூ.65-க்கும், ரூ.13-க்கு விற்ற சர்க்கரை ரூ.29 என உயர்ந்து இருப்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
உலக அளவிலான நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், மோர் போன்ற நிறுவனங்களும் சில்லரை வணிக கடைகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றன. இதுபோன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சேமிப்பு வரையறை இல்லை.
எனவே, பல்வேறு துறை தொழில்களில் ஈடுபடும் இந்த நிறுவனங்களிடம் பல லட்சம் கோடி புரள்கிறது. இவர்கள் அளவுக்கு மீறி பொருட்களை வாங்கி பதுக்கி வைக்கும் காரணங்களினாலும் அரிசி, பருப்பு போன்ற பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தகம்!
உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய ஆன்லைன் வர்த்தகத்திற்கு இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்க வேண்டும். அரிசி விலை மேலும் உயர்ந்துவிடாமல் தடுக்கவும் முதல்வர் கருணாநிதி தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாவட்டந்தோறும் நெல் உற்பத்தியை அதிகப்படுத்திட அதிகாரிகளைக் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications