கறுப்பு பணம்-இந்தியர்களின் பட்டியலை தர சுவிட்சர்லாந்து மறுப்பு ஜெனீவா
இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாக பல்லாயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளனர்.
இவ்வாறு இந்தியர்கள் இந்த வங்கிகளில் வைத்துள்ள பணம் ரூ.70 லட்சம் கோடிக்கு மேல் என்று ஒரு தகவல் உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அத்வானி, பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தக் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து இந்த வங்கிகளில் பணத்தை முடக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிஸ் அரசிடம் கேட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அந்த நாட்டிடம் தர சுவிஸ் நாட்டின் முன்னணி வங்கியான யுபிஎஸ் ஒப்புக்கொண்டது.
இதன்படி சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 4,450 அமெரிக்கர்களின் விபரங்களை அந் நாட்டிடம் வங்கிகள் சமர்பித்துள்ளன.
இதைத் தொடர்ந்து கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலையும் சுவிஸ் வங்கிகள் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், இந்தப் பட்டியலைத் தர முடியாது என்று சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு மறுத்துவிட்டது.
கூட்டமைப்பின் அதிகாரிகள் கூறுகையில்,
வரி ஏய்ப்பு செய்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அளிப்பதாக மட்டுமே அந் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலைத் தரும் திட்டம் எங்களிடம் இல்லை.
இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளுடன் சுவிஸ் அரசு, இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி குற்ற வழக்கு, வரி ஏய்ப்பு ஆகியவற்றில் சிக்கியவர்களின் கணக்கு விவரங்களை மட்டுமே தர முடியும்.
வழக்கு சாராத யாருடைய கணக்கு விவரங்களையும் வெளியிட மாட்டோம்.
இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.
எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம் என்று முகத்தில் அடித்தார்போலக் கூறியுள்ளது சுவிஸ்.