ஆங்கில தேர்வு-வியட்நாமில் ஆசிரியர் மீது ஆசிட் வீசிய மாணவர் கைது
ஹனோய்: ஆங்கில தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவ மறுத்த ஆசிரியர் மீது ஆசிட் வீசிய மாணவன் கைது செய்யப்பட்டான். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வியட்நாமில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
ஹோ சி மிங் நகரில் உள்ள விவசாயம் மற்றும் வன பல்கலைக்கழகத்தில் கடந்த 2002ல் நான்கு ஆண்டு படிப்பில் டிரான் ஜூவன் தாங்க் என்ற மாணவர் சேர்ந்தார். 2006ல் அவரது படிப்பு காலம் முடிந்துவிட்ட போதிலும், அவர் ஆங்கில தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அந்த மாணவன் சமீபத்தில் அந்த கல்லூரிக்கு வந்து பாடம் நடத்தி கொண்டிருந்த டாங் ஹூ டங் என்ற புரோபசரை கையில் கத்தியுடன் தூரத்தி கொண்டு ஓடினான். பின்னர் அவர் மீது பெரிய பாத்திரத்தில் இருந்த ஆசிட்டை எடுத்து ஊத்தினான்.
இதில் அந்த புரோபசரின் உடலில் முக்கால்வாசி பாகம் வெந்து போனது. அவர் அலறி துடித்தார். அவர் தற்போது சோ ரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீசிய போது அந்த புரோபசருக்கு அருகில் இருந்த 13 மாணவர்கள் மீதும் ஆசிட் விழுந்து, அவர்களும் காயமடைந்தனர்.
5 லிட்டர் ஆசிட்...
இதையடுத்து போலீசார் அந்த மாணவனை கைது செய்தனர். அப்போது அவன் கொடுத்த வாக்குமூலம்,
சமீபத்தில் நான் புரோபசரை சந்தித்து ஆங்கில தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். உதவி செய்யுங்கள் என கேட்டேன். ஆனால், அவர் காலம் கடந்துவிட்டது என கூறி மறுத்துவிட்டார்.
இதனால் எனக்கு அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. ஒரு பாத்திரத்தில் 5 லிட்டர் ஆசிட்டை எடுத்து சென்று அவர் மீது ஊற்றினேன் என்றார்.