போர்வெல்லில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சாவு
தண்டாரம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தான்.
அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுபிள்ளை. அவரது மனைவி கல்வி. இவர்களுக்கு அபிநயா (6) என்ற மகளும், கோபிநாதன் (3) என்ற மகனும் உள்ளனர்.
அண்டம்பள்ளம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பதினேழரை அடி ஆழம் வரை போர்வெல் அமைக்கப்பட்டு இருந்தது. அதை சாக்கைக் கொண்டு மூடி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த இடத்தில் கோபிநாதன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் கால் வைத்ததில் தவறி விழுந்து விட்டான்.
உடனே தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சிறுவன் விழுந்த கிணற்றுக்கு அருகே 20 அடிக்கு பள்ளம் வெட்டப்பட்டது.
பின்னர் சிறுவன் விழுந்த இடம் நோக்கி குறுக்காக பவர்டில்லர் இயந்திரம் மூலம் மணலை தோண்டும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டான்.
மயங்கிய நிலையில் இருந்த அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் கோபிநாதன் பரிதாபமாக உயிரிழந்தான்.
உயிருடன் மீட்கப்பட்டும், மருத்துவமனையில் சிறுவன் இறந்து போனதால் அண்டம்பள்ளம் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.