குடந்தை அருகே பஸ் - வேன் மோதலில் 10 பேர் பலி
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நடந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி காஜாமலையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (45). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது குடும்பத்துடன் இன்று காலை சீர்காழி அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட கிளம்பினார்.
இவர்கள் சென்ற வேன், கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது, எதிர் திசையில், சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் நேருக்கு நேர் மோதியது.
இந்தக் கோர விபத்தில் பழனிச்சாமி, மனைவி சுபத்ரா, மகன் கார்த்திக், மகள் ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பெண்களும், ஒரு ஆணும் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.*