பாதுகாப்பு-இந்தியர்களுக்கு ஆஸி. முதல்வர் கடிதம்!
அடிலைட்: தெற்கு ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் 4787 இந்திய மாணவர்களுக்கும், அந்த மாகாணத்தின் முதல்வரான மைக் ரான், தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். அதில், நீங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறீர்கள். எனவே தைரியமாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான இனவெறித் தாக்குதலால் அந்த நாட்டில் படித்து வரும் இந்தியர்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய மாணவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படி தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாணவருக்கும் தெற்கு ஆஸ்திரேலிய மாகாண முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதம் பெறப்பட்ட ரங்கராஜன் ராமசாமி என்ற மாணவர் கூறுகையில், மாகாண முதல்வரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைப் பார்த்து எனக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் நலன் மீது மாகாண அரசு அக்கறையுடனும், கவலையுடனும் உள்ளதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது என்றார்.
மாணவர் ராமசாமி தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேற்படிப்புக்காக இவருக்கு கனடா, அமெரிக்கா, இங்கிலாந்தில் வாய்ப்பு வந்தது. ஆனால் அதை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவைத் தேர்வு செய்தாராம் ராமசாமி. காரணம், ஆஸ்திரேலியாவில் வாழிடச் செலவு குறைவு மற்றும் தரமான கல்வி கிடைக்கும் என்பதால்தானாம்.
இனவெறித் தாக்குதலால் பீதியடைந்துள்ள இந்திய மாணவர்களுக்கு தெற்கு ஆஸ்திரேலிய மாகாண முதல்வர் எழுதியுள்ள இந்த கடிதம் இந்திய மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.