தமிழ் ஈழம் மலருவதை யாராலும் தடுக்க முடியாது - வைகோ
சென்னை: இலங்கையில் தமிழ் ஈழம் மலரப் போவது நிச்சயம். அதைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.
டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன்.
ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் இன்னும் தொடருகிறது. மத்திய- மாநில அரசுகள் அங்கு நடப்பதை வேடிக்கைதான் பார்க்கிறார்கள். இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பன்னீர் செல்வ் பேசுகையில், நான் அ.தி.மு.க.வை விட்டு போக போவதாக தி.மு.க.வினர் வதந்தி பரப்புகிறார்கள். நான் என்றைக்கும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி.
அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனான என்னை முதல்-அமைச்சர் பதவி வரை உயர்த்தி அழகு பார்த்தவர் புரட்சித்தலைவி. வாழ்நாள் முழுவதும் நானும் என் குடும்பத்தாரும் புரட்சித்தலைவிக்கு விசுவாசமாக இருப்போம் என்று தனது பிரச்சினையை மையப்படுத்தி பேசி வைத்தார்.