சத்தியமங்கலத்தில் வைர தாலியை தொலைத்த பெண் ஐபிஎஸ் - வீரர்கள் கண்டுபிடித்தனர்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பயிற்சியின் போது வைரம் பதித்த தாலியை தவறிவிட்டார். இதை அதிரடிப்படையினர் மீட்டு அவரிடம் சேர்த்தனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கமோண்டோ படையினர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அதிரடிப்படை சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சியில் பல பெண் ஐபிஎஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அடர்ந்த காட்டுபகுதியில் நடந்த தேடுதல் வேட்டை பயிற்சின் போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மம்தா பிஸ்னாய் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியின் ஐந்து பவுன் கொண்ட தங்க சங்கில் காணாமல் போனது. இதில் ராஜஸ்தான் பாரம்பரியப்படி வழக்கப்படி வைரக்கல்லும் பதிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் எவ்வளவு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த பெண் ஐபிஎஸ் மனவேதனையோடு பயிற்சி முடித்து ராஜஸ்தான் திரும்பினார்.
இந்நிலையில் அவர்களுக்கு பயிற்சியளித்த அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்.ஐ. சந்திரன் தலைமையிலான குழுவினர், தாலி தொலைத்த அந்த குறிப்பிட்ட வனப்பகுதியில் மீண்டும் ஒருமுறை தேடுதல் வேட்டை பயிற்சி நடத்தினர்.
அப்போது எதிர்பாராத விதமாக மம்தா பிஸ்னாயின் வைரம் பதித்த தாலிக்கொடியை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த தகவல் மம்தா பிஸ்னாய்க்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அதிரடிபடையினருக்கு தலா ரூ. இரண்டாயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், அதை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
அவர்களின் நேர்மையை பாராட்டி அதிரடிப்படை தலைவர் ஐஜி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.












Click it and Unblock the Notifications