விரல்களை வெட்டுவோம்- எஸ்.வி.சேகருக்கு மிரட்டல்
சென்னை: அதிமுக-2 என்ற பெயரில் செயல்பட்டால் 20 விரல்களையும் வெட்டுவோம் என்று கூறி சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.சேகருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மயிலாப்பூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.வி.சேகர். சமீபத்தி்ல் இவரை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
இருப்பினும் இந்த நீக்கம் குறித்து சேகருக்கோ அல்லது சபாநாயகருக்கோ அதிமுக தரப்பு தெரிவிக்கவில்லை. இதை சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்த எஸ்.வி.சேகர், எனவே நான் சட்டசபையில் அதிமுக-2 என்ற பெயரில் செயல்படுவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் எஸ்.வி.சேகருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. மந்தவெளிப்பாக்கத்தில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் படு ஆபாசமாக சேகரைத் திட்டியுள்ளனர்.
டைரி ஒன்றின் தாளில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதத்தில்,
எஸ்.வி.சேகரே நீ அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஆனது எப்படி? நெப்போலியனை தோற்கடித்து உன்னை வெற்றி பெற செய்தோம். உனக்கு விசுவாசம் இல்லை.
எனது தலைவர் எம்.ஜி. ஆரின் ஆணைப்படி நீ அங்க ஹீனமாக்கப்படுவாய். இன்னும் 21 நாளில் உனது 20 விரல்களும் துண்டிக்கப்படும்.
எம்.ஜி.ஆரால் கொள்கை பரப்பு செயலாளராக்கப்பட்ட ஜெயலலிதா தான் அ.தி.மு.க.வின் உரிமையாளர். அ.தி.மு.க.-2 வது அணியின் தலைவர் பதவி வேண்டும் என்று சபாநாயகரிடம் நடந்து சென்று உன்னால் சொல்ல முடியாது. அதற்குள் எம்.ஜி.ஆர். ஆத்மாவின் கடமை நிறைவேற்றப்படும். நீ கொல்லப்பட மாட்டாய் ஆனால் அவஸ்தைப்படுவாய் என்று எழுதப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இந்தக் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சேகர் புகார் கொடுத்துள்ளார்.
இந்தக் கடிதம் சைதாப்பேட்டையிலிருந்து வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.