காவல் நிலையம் அருகே ஜவுளிக்கடையில் ரூ. 4 லட்சம் கொள்ளை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் துணி வகைகளோ, சில்லரை வகைகளோ கொள்ளை போகவில்லை.
நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் பிரபல ஜவுளி கடை ஓன்று உள்ளது. இது 3 அடுக்கு மாடி கொண்டது. 3வது மாடியில் பின்புறம் கம்பிவலை மற்றும் கிரில் கேட் போடப்பட்டுள்ளது.
இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த ஊழியர்கள் 3வது மாடியில் உள்ள கம்பி வலை அறுக்கப்பட்டு கிரில்கேட் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கீழ்தளத்தில் கவுன்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசந்திரன், முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். டிஎஸ்பி சிவபாதமும் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டார்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த கைரேகை பதிவு செய்யப்பட்டது. கம்பி வலையை அறுத்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இந்த கடையில் நேற்று ரூ. 50 ஆயிரத்தை சில்லரையாக மாற்றி வைத்திருந்தனர்.
இதை கொள்ளையர்கள் எடுக்கவில்லை. அதே போல விலை உயர்ந்த துணிகளும் அப்படியே இருந்தன. நகரில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இடத்தில் இந்த ஜவுளிகடை உள்ளது. சிறிது தூரத்தில் கோட்டார் போலீஸ் நிலையம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையம் உள்ளது.
ஆனால் அதை மீறி கொள்ளையர்கள் துணிச்சலாக இந்த கொள்ளையை நடத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications