ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தை பெற்ற மும்பை பெம்
மும்பை: இந்தியாவிலேயே முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த 24 வயதுப் பெண் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றுள்ளார். ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், தாயும் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில்தான் இந்த அதிசய பிரசவம் நடந்துள்ளது.
பிரசவித்த பெண்ணின் பெயர் சபீரா கான். மீரா சாலையைச் சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கர்ப்பமானார் சபீரா கான். அவருக்கு ஐந்து குழந்தைகள் கருவுற்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கோகிலா பெண் மருத்துவமனை டாக்டர்கள் மிகுந்த கவனத்துடன் அப்பெண்ணை பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் அப்பெண்ணுக்கு சிசேரியன் மூலம் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் டாக்டர் சுசித்ரா பண்டிட் கூறுகையில், இந்தியாவில் ஐந்து குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து ஐந்துமே உயிருடன் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்பு, ஐந்து குழந்தைகள் பிறந்துள்ள போதிலும் அவற்றில் சில பிறந்த சில மணி நேரங்களியே இறந்து விட்டன என்றார்.
பிரசவ தேதிக்கு முன்பாகவே குழந்தைகள் பிறந்துள்ளதால் 2 குழந்தைகள் வென்டிலேட்டரிலும், மற்ற மூன்றும் பிரசவத்திற்குப் பிந்தைய அவசர சிகிச்சைப் பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐந்து குழந்தைகள் மற்றும் தாய் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்திருப்பது குறித்து சபீராவும், அவரது கணவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு குழந்தை பெண்ணாக இருந்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றார் சபீரா.












Click it and Unblock the Notifications