2 மார்வாடி குடும்பங்கள் மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு
சென்னை: தொழில்போட்டி காரணமாக சென்னையில் அடகு வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய மற்றொரு அடகு வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் வசித்து வருபவர் கைலாஷ் சந்த் (56). இவருக்கு சஞ்சுதேவி(45) என்ற மனைவியும், விசித்ரா(15), திரிஸ்லா(13), ரகானா(11) மற்றும் சித்தாந்த்(9) என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
அடகு வியாபாரம் செய்து வரும் கைலாஷ் சந்த் என்பவருக்கும் மற்றொரு அடகு வியாபாரியான கொட்டிவாக்கம் பாபுலால் என்பவருக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையி்ல் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு கைலாஷ் வீட்டுக்கு வந்த பாபுலால் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது பாபுலால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கைலாஷ் சந்த்தை வெட்டியுள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் அதை தடுக்க வந்துள்ளனர். ஆத்திரம் கொண்ட பாபுலால் அவர்களையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் கைலாஷ் சந்தின் மகன் சித்தாந்தை தவிர மற்ற அனைவரும் காயமடைந்தனர். கைலாஷ் சந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாபுலாலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications