மதுரை: போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து பெண் பலி
மதுரை: மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் பெண் பலியானார்.
மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் சதீஷ் குமார் என்ற போலீஸ்காரர் ஈடுபட்டிருந்தார். இன்று காலை அவர் பணியில் இருந்தபோது துப்பாக்கியை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அது எதிர்பாராத விதமாக சுட்டு விட்டது.
இதில் அந்தப் பக்கமாக போன சுந்தரவள்ளி என்ற பெண் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டு மக்கள் கூடி விட்டனர்.
இன்று மதுரை வருகிறார் ராகுல் காந்தி. மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காந்தி மியூசியம், மாநகராட்சி வளாகத்திற்கு சற்று தொலைவில்தான் உள்ளது.
இந்த நிலையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது. குண்டு வெடித்துவிட்டதாக புரளி கிளம்பியது. ஆனால் பின்னர்தான் தவறுதலாக துப்பாக்கி சுட்ட விவரம் தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறை ஆணையர் நந்தபாலன் கூறுகையில், இது தவறுதலாக துப்பாக்கி சுட்டதால் ஏற்பட்ட சம்பவம்தான். இதில் ஒரு பெண் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சட்ட மாணவர்கள் மறியல்...
இதற்கிடையே ராகுல் காந்தியின் மதுரை வருகையைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுரையில் கல்லூரிக்கு முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கைத் தமிழர் இன அழிப்பைத் தடுக்கத் தவறியதற்காக காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் போலீஸார் அவர்களை கலைந்து போகுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சட்டக் கல்லூரி வளாகம், காந்தி மியூசியத்திற்கு அருகில்தான் உள்ளது என்பதால் அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.