கண்காட்சியில் பரிதாபம்-சென்னை வெயிலுக்கு 4 பெங்களூர் நாய்கள் சாவு

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் கெனைன் கிளப் சார்பில் நாய்க் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான 350 நாய்கள் கலந்து கொண்டன.
காலை 10 மணிக்கு கண்காட்சி தொடங்கியது. காட்சிக்கு வந்திருந்த பல நாய்கள் வெளிநாட்டு உயர் ரக நாய்கள் ஆகும். இவை பெரும்பாலும் ஏசி அறைகளில் வளர்க்கப்பட்டு வரும் சொகுசு நாய்கள்.
இதனால் அவற்றை ஏசி பொருத்தப்பட்ட வாகனங்களில் கூட்டி வந்திருந்தனர். ஆனால் கண்காட்சியின்போது நடத்தப்படும் அழகு நடைப் போட்டியின் போது வெளியே விட்டனர்.
அப்போது கடும் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த ஏசி ரூம் நாய்கள் சோர்வடைந்தன. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாய்களின் உரிமையாளர்கள் தட்டிக் கொடுப்பதும், தண்ணீர், ஜூஸ் போன்றவற்றைத் தருவதுமாக இருந்தனர்.
இந்த நிலையில் பெங்களூர் ராகேஷ் என்பவரின் ராட்வீலர் ரக நாய் வெயில் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதேபோல இன்னொரு ராட்வீலர் நாய், ஒரு செயின்ட் பெர்னார்ட் ரக நாய் மற்றும் நெப்போலியன் மாஸ்டிப் ரக நாய்கள் என அடுத்தடுத்து மேலும் 3 நாய்கள் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவை அனைத்தும் பெங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்டவை.
இதையடுத்து நாய்களின் உரிமையாளர்கள், போட்டி அமைப்பாளர்களிடம் சண்டைக்குப் போய் விட்டனர்.
நாய்கள் ஓடுவதைப் பரிசோதிப்பதற்காக 4 ரவுண்டு மைதானத்தைச் சுற்றி ஓட விடுவார்கள். ஆனால் நேற்று 12 ரவுண்டு ஓட விட்டனராம். இதனால்தான் நாய்கள் சோர்வடைந்து செத்துப் போய் விட்டதாக அதன் உரிமையாளர்கள் அழுதபடி புகார் செய்தது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
இதில் ராட்வீலர் ரக நாய்களின் விலை ரூ. 3.5 லட்சமாம். மற்ற ரக நாய் விலை ரூ. 1 லட்சம் வரை இருக்குமாம்.
அரிய வகை நாய்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காததால்தான் இந்த நாய்கள் இறந்து போய் விட்டன. போட்டி அமைப்பாளர்கள் கவனக்குறைவே இதற்குக் காரணம் என புளூ கிராஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சந்தோஷத்துடன் தொடங்கிய நாய்க் கண்காட்சி நான்கு நாய்களின் திடீர் மரணத்தால் சோகமாகிப் போனது.












Click it and Unblock the Notifications