நாகர்கோவிலில் ராஜூவ் சிலை உடைப்பு-பதட்டம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கூடி போராட்டம் செய்ய முயன்றதால் லேசான பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயநகரில் பகுதியில் நடந்துள்ளது.
இன்று காலை இப்பகுதியிலிருந்த ராஜீவ்காந்தி சிலையின் மூக்கு பகுதி உடைத்து தூண்டாக கிடந்தது. மேலும், தலைப்பகுதி தாக்கப்பட்டு, கீறல் விழுந்திருந்தது. இன்று காலை இதை கண்ட காங்கிரஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் 50 பேர் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வமணி, மாநில இணை செயலாளர் குருபரன், வட்டார செயலாளர் செல்வமணி ஆகியோர் தலைமையில் அங்கு திரண்டனர்.
ராஜீவ்காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரி வைத்து போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள்.
இதையடு்தது தகவல் அறிந்த நாகர்கோவில் டிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் வேல்மணி, ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காங்கிரஸ் கட்சியினரை சாமாதனப்படுத்தினர்.
சிலை உடைப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து காங்கிரஸார் போராட்டத்தை கை விட்டனர்.
இது குறித்து மாணவர் காங் தலைவர் செல்வமணி ஆரல்வாய்மொழி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.